கொரோனாவால் கோமா நிலைக்கு சென்ற கர்ப்பிணி: பிரசவத்தில் பிறந்த இரட்டையர் எப்படி இருக்கிறார்கள்?

வியாழன், 19 நவம்பர் 2020 (09:38 IST)
பர்பெச்சுவல் உகே, பர்மிங்காம் நகர மருத்துவமனையில், முடக்குவாத நோய் சிகிச்சை மருத்துவ ஆலோசகராக இருக்கிறார். இவருக்கு கடந்த மார்ச் மாதம் உடல் நலம் சரி இல்லாமல் போனது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை கோமா நிலையில் வைக்கப்பட்டார். இதை ஆங்கிலத்தில் Induced Coma என்கிறார்கள்.

அந்த நேரத்தில் இவரது கருவில் இரட்டையர் சிசுக்கள் வளர்ந்து கொண்டிருந்தன, கடந்த ஏப்ரல் மாதம் 26 வாரங்களே ஆன இவருக்கு பிரசவம் நடந்தது. சிசேரியன் மூலம் நடந்த பிரசவத்தில் உகேவுக்கு இரட்டையர் ஆண் குழந்தைகள் பிறந்தனர்.

சொசிகா பால்மர் என்ற குழந்தை 770 கிராம் எடையும், அதன் சகோதரர் ஒசினாசி பாஸ்கல் 850 கிராம் எடையும் இருந்தது. ஆனால், பிரசவம் நடந்த பிறகும் குழந்தைகளின் தாய் உகே, அடுத்த 16 நாட்களுக்கு கோமா நிலையிலேயே இருந்தார்.


அந்த நிலையை விவரித்த உகேயின் கணவர் மேத்யூ, "கடக்கும் ஒவ்வொரு நாளும், என் மனைவி இறந்தவர்களில் ஒருவராக இருக்க மாட்டார் என நம்பிக் கொண்டு இருந்தேன், அந்த நாட்கள் மிகவும் பயமாக இருந்தன" என்றார்.

"நாங்கள் ஒன்றாகவே வாழ்ந்தோம். எனவே அவள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்வதே சிரமமாக இருந்தது. உகே, கோமாவில் இருந்து சுய நினைவுக்குத் திரும்பியதும் குழப்பமாக இருந்ததாகத்தெரிவித்தார். ஏற்கெனவே இரண்டு பிள்ளைகளுக்கு தாயான உகே, பிரசவத்துக்குப் பிறகு 2 வாரங்கள் கழித்து எழுந்த போது தன்னைச் சுற்றி இரட்டை குழந்தைகள் இருப்பதை பார்த்தார். அந்த காட்சிகளை அவரால் நம்ப முடியவில்லை," என்று அவரது கணவர் தெரிவித்தார்.

மருத்துவமனை ஊழியர்கள், உகேவின் இரட்டைக் குழந்தைகளைக் காண்பித்தபோது, அதை அவரால் நம்ப முடியவில்லை.

116 நாட்களை மருத்துவமனையில் கழித்த பின், இரட்டைக் குழந்தைகளை மருத்துவமனையில் இருந்து வெளியே அழைத்துச் செல்ல அனுமதித்தார்கள். இப்போது நிலைமையை ஏற்றுக் கொண்ட உகே, உடல் அளவில் குழந்தைகள் இருவரும் மேம்பட்டு வருகிறார்கள் என்று கூறினார்.

இரட்டையர் குழந்தைகள், தங்கள் வாழ்வின் தொடக்கத்திலேயே சிரமமான பாதையைக் கடக்க வேண்டும் என நான் விரும்பவில்லை. தனது குழந்தைகள் பிறந்தவுடன் முதல் 2 வாரங்களுக்கு தன்னைப் பார்க்க முடியாமல் இருந்ததை நினைத்து வருந்துவதாக அவர் தெரிவித்தார்.

ஆனால் கடைசியில் எல்லாம் சிறப்பாக முடிவுற்றது மகிழ்ச்சி தருகிறது என்கிறார் உகே.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்